சிவாஜி ; ஒரு எழுதி முடிக்கப்படாத கலைக் காவியம்”
அண்மையில் ஜெயமோகன் என்ற குறுக்குவழியில் புகழ் பெறுவதில் நம்பிக்கை உடைய ஒரு அரைகுறை எழுத்தாளர் சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் பற்றி, அவர்களின் திரைப்படங்கள் பற்றி விமர்சித்திருந்தது குறித்து விகடன் அதை துணிவுடன் பதிவு செய்திருந்தது. அதை பதிவு செய்திருந்த தன்மை குறித்து பிந்தைய வாரத்தில் சுய விளக்கமும் அளித்திருந்தது.
சிவாஜி மற்றும் எம்.ஜி.ஆர் பற்றிய திருவாளர் ஜெயமோகன் அவர்களின் விமர்சனம்(?) குறைத்து மதிப்பிடப் பட முடியாத ஒன்றாக இருக்கலாம். ஆனால் மேற்குறிப்பிடப் பட்ட இருவரும் திரைத் துறையை மட்டுமின்றி, தமிழ்கூறும் நல்லுலகையே குறிப்பிட்ட காலம் வரையில் தங்களின் பிடியில் வைத்திருந்தவர்கள் என்கிற உண்மை தமிழர்கள் அனைவரும் அறிந்ததே.
அதற்கெல்லாம் சிகரம் வைத்தாற் போல இன்னுமொரு உண்மை;
இந்த மண்ணுடல் விட்டு .இறந்து வானுலகெய்தவர்களை விமர்சிப்பது நமது தமிழ் கலாச்சாரத்திலே ‘அத்து மீறல் அல்லது கலாச்சாரக் கேடு’.
ஆனால் இந்த சின்ன விசயம் கூட அறியாத பெரிய எழுத்தாளர் ‘பேப்பர் மேல பேனா போட்டு’ எப்படி இவ்வளவு பெரிய விசயத்தை எழுதலாம்?அதிலும் பெண்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து உட்கார்ந்திருக்கும் நடிகர் திலகம் பற்றி என்றவுடன் நம் கோபத்திற்கு கேட்க வேண்டுமா?
இதற்கு உடனடியாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது மட்டும் போதாது என்பதாலும், அந்த கலைக் குறிசில் பற்றிய சில தகவல்களை பகிர்ந்து அல்லது பரிமாறிக் கொள்ளவுமே இந்த கட்டுரை.
சிவாஜி !
சொல்லும்போதே ஒரு கம்பீரம் !
அந்த கம்பீர உருவம் காட்டிய கட்டியங்கார வித்தைகள் எத்தனை ?
அந்த ஒற்றை நாக்கிலிருந்து கிளம்பிய வித்தியாச சப்தங்கள் எத்தனை ?
அந்த ஒற்றை தொண்டை கிளப்பிய ஏற்ற இறக்க குரல் ஜாலங்கள் எத்தனை எத்தனை?
எப்படி இன்னும் கூட பரிமேலழகர் முதல் சுஜாதா வரை உரை எழுதிய பின்னும் திருக்குரல் புதியதாகவே தெரிகிறதோ, அப்படி சிவாஜியின் கலைதிறன் நாளைய தலைமுறைக்கும் புதிதே !
எப்படி எல்லாத் தலைமுறைக்குமுரிய கருத்தைச் சொன்ன திருவள்ளுவன் மனித மகனாக இருக்க முடியாது என்ற சந்தேகம் இன்னும் இன்றைய தலைமுறை வரை தொடர்கிறதோ, அப்படியேதான் ஏற்றுக் கொண்ட எல்லா பாத்திரங்களையும் தானாகவும், தானே அப்பாத்திரங்களாகவும் தோன்ற வைக்க முடியுமென்ற அந்த ஒரு அசாதாரண நடிகன் மனித மகனாக (அவர்தான் தெய்வ மகனாச்சே) நிச்சயம் இருக்க முடியாது.
நடிகவேள் ராதாவின் வாரிசு ராதாரவி ஒரு பேட்டியில் “ அவர் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரி சிரிப்பார்;பேசுவார்;நிற்பார்’நடப்பார். இது எல்லோரும் அறிந்ததே. ஆனால் அவர் ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு மாதிரி சொறிவதைப் பார்த்து நான் அசந்திருக்கிறேன்” என்று சொன்னார். இது எப்படி இருக்கு?
சிவாஜியின் படங்களிலேயே நாலு அஞ்சு படம்தான் நல்ல படம் என்று கூடத்தான் ஒரு கருத்தை படிக்க நேர்ந்தது. நாலு அஞ்சு நல்ல படம் நடித்தவருக்கா
1962-ல் கலைமாமணி,
1966-ல் பத்ம பூஷண்,
1986-ல் டாக்டர் பட்டம்(அண்ணாமலை பல்கலைக் கழகம்),
1995-ல் செவாலியே,
1997-ல் தாதா சாகேப் பால்கே விருதும்,
தேசிய விருது – 19 படங்கள்,
தமிழக விருது – 5 படங்கள்,
அவரது பெயரில் இந்திய அரசு தபால் தலையும் வெளியிட்டும் உள்ளது?
ஜெயமோகன் மாதிரியான சில எழுத்தாளர்களின் (சாரு நிவேதிதா,கோணங்கி) வார்த்தைப் பிரயோகங்கள் அவர்களுக்கே புரியாது என்பது வேறு விஷயம். அதை விட்டு விடுங்கள். படிக்கிறவங்களின் நிலையை யோசியுங்கள் ? ஒரு பக்கம் தாண்டவே உயிரைக் கொடுத்து படிக்க வேண்டி இருக்கும். ஒரு மனுஷனுக்கு ஒரு உசிருதானே இருக்கு?